பதிவு செய்த நாள்
20
மார்
2021
03:03
மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மயிலாடுதுறை திருஇந்தளூரில் சந்திரன் வழிபட்ட தலமும், 108 திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமும், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களில் 5-வது ஆலயமும், திருமங்கை ஆழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்ட தலமுமான ஸ்ரீபரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நான்கு வீதிகளில் கொடி சீலை புறப்பாடும், ஆலய பிரகாரத்தில் உற்சவர் புறப்பாடும் நடைபெற்று, பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோயில் பட்டாட்டசாரியார்கள், தீர்த்தகாரர்கள், அத்தியாபாகம் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து தினசரி உற்சவர் பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களிலும், 4-ஆம் நாள் ஓலை சப்பர வீதியுலாவும், 7-ஆம் நாள் திருக்கல்யாணமும், 8-ஆம் நாளில் வெண்ணைத் தாழி சேவையும், 9-ஆம் நாள் திருத்தேர் உற்சவம் மற்றும் தீர்த்தவாரி விழாவும் நடைபெற்று 10-ஆம் நாளன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.