பதிவு செய்த நாள்
23
மார்
2021
10:03
சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழாவின், மூன்றாம் நாளான நேற்று, கற்பகாம்பாளுடன் சுவாமி, அதிகார நந்தி வாகனத்தில், மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதிகார நந்தி என்பது, சிவன் கோவில்களில் காணப்படும், ஐந்து வகை நந்திகளில், மூன்றாவதாக இருப்பது.கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்தி, சிவனை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பதால், அதிகார நந்தி என பெயர் வந்தது.மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவின், மூன்றாம் நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு, அதிகார நந்தி வாகனத்தில், அம்பாளுடன் எழுந்தருளிய உற்சவர் கபாலீஸ்வரர் கோபுர தரிசனம் தந்தார்.பின், மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு பூதகி, வெள்ளி பூத வாகனம், தாரகாசுர வாகனம் ஆகியவற்றின் புறப்பாடு நடந்தது.கருடனை தடுத்த நந்தி!கயிலையில், சிவபெருமானை தரிசிப்பதற்காக திருமால், கருட வாகனத்தில் சென்றார். சிவதரிசனத்திற்கு, திருமால் சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். திருமால் வர காலதாமதம் ஆனது.இதனால், நந்திதேவன் அனுமதியின்றி, கருடன் உள்ளே செல்ல முயன்றார். நந்தி தடுக்கவே, இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில், கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.தன்னைக் காக்க, திருமாலை அழைத்தார் கருடன். திருமால், வேண்டிய படி, கருடனை மன்னிக்குமாறு நந்தியிடம், சிவபெருமான் கோரினார் என்பது புராணம்.
திருவிழாக்காலங்களில், சிவபெருமான், இந்த அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வருகிறார்.அதிகார நந்தி சேவையை தரிசிக்கும் பக்தர்கள், கைலாயத்தில் சிவ தரிசனம் செய்வதற்கு சமமானது என்பது ஐதீகம்.மருந்தீஸ்வரர் கோவில்திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலின் பங்குனி மாதப் பெருவிழாவின், மூன்றாம் நாளான நேற்று, காலை 6:00 மணிக்கு உற்சவர் சந்திரசேகரர், அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளினார்.பின், மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு, 8:30 மணிக்கு, சந்திரசேகரர், பூத வாகனத்தில் சந்திரனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, தியாகராஜர், மூன்றாம் திருபவனி, பார்த்தசாரதிக்கு அருளல் நிகழ்ச்சி நடந்தது.