பதிவு செய்த நாள்
26
மார்
2021
02:03
திருப்பதி:திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க முடியாது, என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பக்தர்களின் உண்டியல் காணிக்கைகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளை, திருமலை திருப்பதி தேவஸ்தானம், வங்கியில் முதலீடு செய்கிறது.
முதலீடு: இதன் வாயிலாக கிடைக்கும் வட்டி வருவாய் உள்ளிட்டவற்றை கொண்டு, தேவஸ்தான பணிகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. உண்டியலில் பெறப்படும் தங்கம், நன்கொடையாக வழங்கப்படும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை நிரந்தர வைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் வருவாயும், இதில் உள்ளடக்கியது. இவற்றுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. மேலும், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு, தலா, ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவில்லை. என்றாலும், அந்த லட்டு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களுக்கும், அறைகளின் வாடகை கட்டணத்தின் மீதும், ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு வருகிறது. அதனால், ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி.,யாக, தேவஸ்தானம் சார்பில் செலுத்தப் பட்டு வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஒரு தார்மீக நிறுவனம் என்பதால், தேவஸ்தானத்திற்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, தேவஸ்தான அதிகாரிகளும், ஆந்திர அரசும், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தன.
வழங்க முடியாது: இந்நிலையில், ஆந்திர மாநில எம்.பி., விஜயசாரதி ரெட்டி, சமீபத்தில் பார்லிமென்டில் பேசுகையில், நாட்டில் உள்ள கோவில்களில் மிக முக்கிய கோவிலாக ஏழுமலையான் கோவில் கருதப்படுகிறது. எனவே, அதை நிர்வகிக்கும் தேவஸ்தானத்திற்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், நாட்டில் முக்கிய கோவில்கள் ஏராளமாக உள்ளன. அவற்றிற்கெல்லாம் வழங்கப்படாத, ஜி.எஸ்.டி., விலக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மட்டும் வழங்க முடியாது, என்றார்.