பதிவு செய்த நாள்
30
மார்
2021
11:03
அவிநாசி: கருவலூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
அவிநாசி அருகேயுள்ள கருவலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் அருணாசலம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: கருவலூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, வரும் 29ம் தேதி முதல், அடுத்த மாதம், 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் கடைகள், ராட்டினம், தூரி, கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் ஆகியவை விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு நோய் தொற்று பரவல் காரணமாக, கோவில் நிர்வாகம், கடைகள் வைக்க, கலை நிகழ்ச்சிகள் நடத்த, அன்னதானம் வழங்க தடை விதித்துள்ளது. இந்நிலையில், கருவலூர் ஊராட்சி நிர்வாகம், தன்னிச்சையாக ராட்டினம் தூரி போன்றவற்றை வைக்கவும், கடைகள் வைக்கவும் அனுமதியளித்துள்ளது. கடந்த, 2019ல், நடந்த தேர் திருவிழாவின் போது, ராட்டின தூரியில் சிக்கி, ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது; அந்த வழக்கு, விசாரணையில் உள்ளது. எனவே, இந்தாண்டு, தேர் திருவிழாவின் போது, பெருந்தொற்று காரணமாக, பொதுமக்கள், அதிகளவில் கூடாமல் இருக்கவும், அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியாக விழா நடைபெறும் வண்ணம், ஊராட்சி நிர்வாகம், தன்னிச்சையாக அனுமதியளித்துள்ள ராட்டினம், தூரி மற்றும் தற்காலிக கடைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.