பதிவு செய்த நாள்
31
மார்
2021
10:03
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி பால்குட விழா நடந்தது. இக்கோயிலில் பங்குனி விழா மார்ச் 20 கொடியேற்றத்துடன் துவங்கி நேற்று முன்தினம் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. அப்போது தினமும் அம்மன் சிங்கம், பூதகி யானை, காமதேனு, குதிரை வாகனங்களில் வீதி வலம் வந்தார். விழாவின் 4 ம் நாளன்று வண்டி மாகாளி உற்சவம், மார்ச் 28 காலை முதல் அக்னிச்சட்டி ஊர்வலம், இரவு மின்சார தீப தேரோட்டம் நடந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4:00 மணி தொடங்கி, பரமக்குடி வைகை ஆற்றின் முத்தாலம்மன் கோயில், பெருமாள் கோயில், தரைப்பாலம் உள்ளிட்ட படித்துறைகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சக்தி கோசம் விண்ணை முட்ட பக்தர்கள் உற்சாகத்துடன் சென்றனர். இதன்படி பக்தர்கள் பெரிய பஜார், ஈஸ்வரன் கோயில், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக முத்தாலம்மன் கோயிலை அடைந்தனர். தொடர்ந்து வேல் குத்தி இளைஞர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி ஆடி மகிழ்ந்தனர். அங்கு 10:30 மணி தொடங்கி 1:30 மணி வரை மஞ்சள், பன்னீர், பஞ்சாமிர்தம் மற்றும் குடம் குடமாக பால் என, பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து உற்சவர், மூலவர் அலங்கரிக்கப்பட்டு மதியம் 2:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து சென்றனர். இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் சயன கோலத்தில் வீதி வலம் வந்தார். ஏற்பாடுகளை முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்திருந்தனர்.