தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2021 11:03
இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீச்சட்டி, கரும்பு தொட்டில், உருண்டு கொடுத்தல் என ஆடு, கோழி பலியிட்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.கடந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு பங்குனி பொங்கல் விழா கடந்த 23 ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு அபிேஷக, ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து கொடி மரத்தில் பூஜாரிகள் கொடியேற்றினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை தரிசித்தனர். இன்று மாலை 6:00 மணிக்கு மேல் மின் விளக்கு அலங்கார தேர் பவனி நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 2 ந் தேதி தீர்த்த வாரியுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது. திருவிழாவிற்காக காரைக்குடி, மதுரை, அருப்புகோட்டை, திண்டுக்கல், பரமக்குடி, இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பக்தர்களுக்கு இலவச மாஸ்க், சானிடைசர் வழங்கப்பட்டது.மேலும் 6க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செய்திருந்தார்.
மானாமதுரை: தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 23 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.ஒரு வார காலமாக நடைபெற்று வரும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. தாயமங்கலத்திற்கு அருகே உள்ள மானாமதுரையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று தாயமங்கலம் ரோட்டில் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து ஆடு,கோழிகளை பலியிட்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.