பதிவு செய்த நாள்
31
மார்
2021
12:03
சத்தியமங்கலம்: ஒரு லட்சம் பக்தர்கள் தீ மிதிக்கும், பண்ணாரி அம்மன் கோவில் விழாவில், கொரோனா கட்டுப்பாட்டால், நடப்பாண்டு, ௧௧ பேர் மட்டுமே தீ மிதித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த, வனப்பகுதியில் அமைந்துள்ள, பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா, பங்குனி மாதத்தில் நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். பல்வேறு நிகழ்வுகளுடன், 15 நாட்களுக்கு மேல் விழா நடக்கும்.
கொரோனா தொற்றால், கடந்த ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டு விழா, கடந்த மார்ச், 15ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவலால், குண்டம் இறங்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பூசாரிகள் உட்பட, 11 பேர் மட்டுமே தீ மிதிக்க அனுமதிக்கப்பட்டனர். காலை, 6:௦௦ மணி முதல், இரவு, 8:௦௦ மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் குண்டம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக நேற்று முன்தினமே, கோவில் முன், 6 அடி நீளத்தில், 4 அடி அகலத்தில் குண்டம் அமைத்து, நள்ளிரவு, 12:௦௦ மணிக்கு தீ மூட்டப்பட்டது. 3:00 மணியளவில் அம்மன் அழைப்பு நடந்தது. இதை தொடர்ந்து அதிகாலை, 3:50 மணியளவில் கோவில் பூசாரி ராஜேந்திரன், முதலில் குண்டம் இறங்கினார். அதை தொடர்ந்து மேலும் இரு பூசாரிகள், அறங்காவலர் எட்டு பேர் என, ௧௧ மட்டுமே தீ மிதித்தனர். இதையடுத்து அரசு உத்தரவுப்படி குண்டம் பகுதி மூடப்பட்டது. அதேசமயம் அம்மனை தரிசிக்க, முதல் நாள் இரவே வந்து விட்ட நுாற்றுக்கணக்கான பக்தர்கள், கோவில் வளாகத்தில் காத்திருந்தனர். அவர்கள் காலை, 6:௦௦ மணி முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஏப்.,1ல் மஞ்சள் நீராட்டு விழா, 2-ல் திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏப்.,5ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.