பதிவு செய்த நாள்
31
மார்
2021
12:03
அந்தியூர்: அந்தியூர் அருகே, அக்னி சட்டியை வயிற்றில் வைத்து, படுத்து உருண்டபடி, கோவில் பூசாரி நுாதன வழிபாட்டில் ஈடுபட்டார். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம், விராலிக்காட்டூரில் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில், பொங்கல் விழா நடக்கிறது. கடந்த, 16ல் நடப்பாண்டு விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, கோவில் பூசாரி படுத்துக்கொண்டு தனது வயிற்றில் அக்னி சட்டியை வைத்து வலம் வரும், நிகழ்வு நேற்று நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் நேரில் பார்த்து வியந்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: கோவில் பூசாரி ஒருவர், தனக்கு குழந்தை பாக்கியம் கேட்டு, நுாறு ஆண்டுகளுக்கு முன், தரையில் படுத்துக்கொண்டு வயிற்றில் அக்னி கிரகத்தை (சட்டி) வைத்து கொண்டு, கோவிலை ஒரு முறை சுற்றி வருவதாக வேண்டினார். வேண்டுதல் பலித்து அவருக்கு குழந்தையும் பிறந்தது. இதையடுத்து அந்த நிகழ்வு, வழிவழியாக நடக்கிறது. பூசாரி அக்னி கிரகத்தை வயிற்றில் வைத்து சுற்றி வரும்போது, அவருக்கு துணையாக தப்பட்டை வாசிப்பவரும் வாசித்தபடியே கோவிலை ஒருமுறை சுற்றி வருவார். இதன்படி இருவரும் நேற்று வலம் வந்தனர். இவ்வாறு பக்தர்கள் கூறினர். கோவிலில் இன்று அம்மை அழைத்தல், பொங்கல் வைபவம் நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.