திருச்சி: அங்காள ஈஸ்வரி, பீளிக்கான் முனீஸ்வரர் கோயிலில் திருவிழாவையொட்டி 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
திருச்சி மாநகர், விமானநிலையத்தில் எழுந்தருளியுள்ள அங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் கோயிலில் 38ம் ஆண்டு திருவிழாவானது கடந்த 2ம்தேதியன்று காப்புகட்டுதல் மற்றும் கொடியேற்றுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்பாள் அக்னிகரகத்துடன் கிராமங்கள்தோறும் வலம்வருதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இன்றையதினம் அம்பாள் சக்தி கரகத்துடன் பால்குடம் எடுத்துவரும் வைபவம் நடைபெற்றது. கொட்டப்பட்டு கருப்பண்ணசுவாமி கோயிலிலிருந்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகுகுத்தியும், தீச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்து கிராமபுறப்பகுதிகளில் ஊர்வலமாக வலம்வந்து, அங்காள ஈஸ்வரிக்கு பால்அபிஷேகம் செய்து பக்திபரவசத்துடன் வழிபட்டனர். 10ம்தேதி முதல் கட்டுப்பாடுகளுடன்கூடிய கொரோனா தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் இன்றையதினமே பால்குடம், அக்னிசட்டி ஏந்திவந்து வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.