பதிவு செய்த நாள்
09
ஏப்
2021
05:04
வில்லியனுார்; வில்லியனுார் துாய லுார்து அன்னை மாதா ஆலய ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.ஆலய திருத்தல பங்குதந்தை பிச்சைமுத்து அடிகளார் செய்திக் குறிப்பு: புதுச்சேரி அடுத்த வில்லியனுார் துாய லுார்து அன்னை மாதா திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா, ஈஸ்டர் பண்டிகை முடிந்து 6ம் நாளில் கொடியேற்றத்துடன் துவங்கும்.
இவ்வாண்டிற்கான பெரு விழா நாளை (10ம் தேதி) கொடியேற்றதுடன் துவங்குகிறது. காலை 5.30 மணியளவில் ஆலயத்தில் நடக்கும் கூட்டு திருப்பலிக்கு பின், ஆலய கொடிமரத்தில், சென்னை மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றுகிறார்.பின், தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகளும், இரவு அலங்கரிக்கப்பட்ட மாதா தேர் பவனி நடக்கிறது. முக்கிய விழாவாக வரும் 17ம் தேதி மாலை 6 மணியளவில் சேலம் முன்னாள் ஆயர் சிங்கராயர் தலைமையில் கூட்டு திருப்பலி, மறுநாள் (18ம் தேதி) ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு புதுவை - கடலூர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலியும், அன்று மாலை 6:00 மணியளவில் புதுச்சேரி கடலுார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் சிறப்பு திருப்பலி, ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கடைபிடித்து மக்கள் விழாவில் கலந்து கொள்ள அழைக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.