பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
02:04
திருவண்ணாமலை: பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், திருவண்ணாமலையில், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்வர். கொரோனாவால், கடந்த, 2020 மார்ச், 24 முதல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த, 13 மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், 14வது மாதமாக, வரும், 26 மற்றும், 27ல், சித்ரா பவுர்ணமி, கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துாரி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு, 10:00 மணி முதல், காலை, 4:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சித்ரா பவுர்ணமி வரும், 26 மதியம், 12:18 முதல், 27 காலை, 9:59 மணி வரை, பவுர்ணமி திதி உள்ளது. கொரோனா ஊரடங்கால், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்களை பாதுகாக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.