மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று (ஏப்.,24) நடக்கிறது.
இத்திருவிழா ஏப்.,15 கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்., 26 வரை கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் குறிப்பிட்ட நேரம் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். இன்று காலை 8:45 மணி முதல் 8:50 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. பக்தர்களுக்கு அனுமதியில்லை. திருக்கல்யாணத்தை www.maduraimeenakshi.org, யுடியூப் மூலம் காணலாம். திருக்கல்யாண அலங்காரத்தில் அம்மன், சுவாமியை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.
இன்று பக்தர்கள் வழக்கம்போல் மதியம் 3:30 - மாலை 5:30 மணி, இரவு 7:30 - 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். நாளை சட்டத்தேரன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 4:00 - 5:30 மணி, இரவு 7:30 - 9:00 மணி வரையும், ஏப்., 26 காலை 7:00 - 10:30 மணி, மாலை 4:00 - 5:30 மணி, இரவு 7:30 மணி - 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.