பதிவு செய்த நாள்
03
மே
2021
04:05
கிருஷ்ணகிரி: சென்னானுார் அருகே, 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அடுத்த சென்னானுார் அருகே பாறை குகையிலுள்ள ஓவியங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: வெண்சாந்து ஓவியங்கள், 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதில் குறியீடுகளும், மனித உருவங்களும் உள்ளன. நடுவிலுள்ள ஓவியத்தொகுதியில் பெண் நேராகவும், அவளுக்கு இருபுறமும் இரண்டு ஆண்கள் தலைகீழாகவும் உள்ளனர். பெண் என்பதை காட்ட இரண்டு புள்ளிகள் மார்புகளாய் காட்டப்பட்டுள்ளன. வலப்பக்கம் சற்று கீழே கைகளை துாக்கி மனித உருவமும், அதன் இடுப்பில் வாளும், அதை இன்னொருவன் தொடுவதுபோலவும் உள்ளது. இதற்கு நேர் இடப்புறம் நடந்து செல்லும் உருவமும், அதற்கு கீழே ஆணும் பெண்ணும் உள்ளன. ஆணின் இடையில் வாளும், கால்களை அகல வைத்து வலது கையை துாக்கி இடது கையால் அருகிலுள்ள பெண்ணை பிடித்திருக்கிறான். இரண்டு நாய் போன்ற விலங்குகளும் உள்ளன. ஒருவன் வலது கையில் வாளை ஓங்கியவாறும், இடது கையால் அருகில் உள்ளவனை பிடித்தபடியும் உள்ளான். ஆங்காங்கே சில மனித உருவங்கள், பாண்டில் விளக்கு, முக்கோணம், சூலம், உடுக்கை போன்ற குறியீடுகளும் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வில், தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பிரகாஷ், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.