பதிவு செய்த நாள்
05
மே
2021
10:05
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில், நடராஜருக்கு சித்திரை திருவோண சிறப்பு வழிபாடு நடந்தது.
சிவபெருமானுக்கு தினசரி 6 கால பூஜை நடப்பது போன்று, நடராஜருக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடக்கும்.சித்திரைத் திருவோணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் இந்த அபிஷேகங்கள் நடைபெறும்.சித்திரைத் திருவோண நாளான நேற்று கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
காலை 8:00 மணிக்கு விநாயகர் பூஜை, நால்வர் துதி, திருவாசகம், பஞ்சபுராணம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை ஓதி வழிபாடுகள் நடந்தது.அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குறவர்கள் நால்வருக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. இதேபோன்று கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனூர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கனங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர், ஆலத்துார் திருவாலீஸ்வரர் கோவில்களிலும் நடராஜபெருமானுக்கு ருத்ர மந்திரங்கள் வாசித்து திருவோண சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.