பதிவு செய்த நாள்
06
மே
2021
10:05
வீரபாண்டி: அக்னி நட்சத்திர வெப்பம் குறைந்து மழை பொழிந்து உக்கிரம் தணிய மருந்தீசருக்கு தாராபாத்திரம் அமைத்து இடைவிடாது பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
கோடையில் அக்னி நட்சத்திரம் எனும், கத்திரி வெயிலில், வழக்கத்தை விட வெப்பம் பல மடங்கு அதிகரிக்கும். நீர்நிலைகள் வறண்டு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். வெயில் உக்கிரம் தணிந்து மழை பெய்து, பூமியெங்கும் சுபிட்சமாக மாற, பழமையான சிவாலயங்களில் மூலவர் ஆவுடையாருக்கு தாராபாத்திரம் அமைத்து, பன்னீர் அபிஷேகம் செய்வர். அதன்படி, அக்னி நட்சத்திர தொடக்கமான நேற்று, ஆட்டையாம்பட்டி, சென்னகிரி வட்டமலை காலனியில் உள்ள மருந்தீசர் கோவிலில், வெயில் உக்கிரம் தணிக்க, மூலவர் ஆவுடையார் மீது, தாராபாத்திரம் அமைத்து, அதில் வெட்டிவேர், விளாமிச்சம் வேர், பன்னீர் ஊற்றி ஈசன் மீது இடைவிடாது அபிஷேகம் செய்யும்படி வைத்து, சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.