பதிவு செய்த நாள்
06
மே
2021
02:05
சென்னை:சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடக்கும் அகழாய்வில், மூடியுடன் பானை, ஏர் உழும் மண் கருவி, தங்கச் சரடு உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.தமிழக தொல்லியல் துறை சார்பில், சிவகங்கை மாவட்டம், கீழடியில், ஏழாம் கட்ட அகழாய்வு நடக்கிறது. இதில், பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன.
குறிப்பாக, 109 செ.மீ., ஆழத்தில், மெல்லிய தங்கச் சரடு ஒன்று கிடைத்துள்ளது. அதன் ஒருமுனை கூரான ஊசி போன்று உள்ளது. அந்த சரடு மொத்தம், 4.5 செ.மீ., நீளத்தில் உள்ளது.அது வளைந்துள்ளதால், காது குத்தும் ஊசியாகவோ, காதணியாகவோ இருக்கலாம் என தெரிகிறது.அதேபோல், 139 செ.மீ., ஆழத்தில், மூடியுடன் கூடிய பானை ஒன்று முழுமையாக கிடைத்துள்ளது. பானை, 25 செ.மீ., உயரமும், 25 செ.மீ., அகலமும் கொண்டுள்ளது. மூடி, 3 செ.மீ., விட்டம் கொண்டதாக இருக்கிறது. இது தானியங்களையோ, வேறு பொருட்களையோ சேமிக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.மேலும், 2 மீட்டர் ஆழத்தில், உழவுக்குப் பயன்படும் கல்லாலான மேழி போன்ற அமைப்பும் கிடைத்துள்ளது. இவை, சங்ககால மனிதர்களின் புழங்கு பொருட்கள் என்பதால், கவனம் பெறுகின்றன.