தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், வடநாட்டில் வைசாக (வைகாசி) பவுர்ணமிக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. லக்னோவுக்கு அருகில் ஆலிகஞ்ச் என்ற இடத்தில் அருள்புரியும் அனுமனை வைகாசி பவுர்ணமி அன்று விசேஷமாக வழிபடுகிறார்கள். அன்று லக்னோ நகரிலிருந்து ஆலிகஞ்ச் திருத்தலத்தில் உள்ள அனுமன் கோயில்வரை ஆண்கள் கோவணம் மட்டும் அணிந்து சாஷ்டாங்கமாக வணங்கியபடி சென்று வழிபடுகிறார்கள். முதலில் சாஷ்டாங்கமாக கைகளை நீட்டி நமஸ்காரம் செய்யும்போது, கைவிரல்கள் மூடிய இடத்தில் ஒரு கல்லை அடையாளமாக வைத்து, பிறகு, எடுத்து நின்று அந்தக் கல் வைத்த இடத்திலிருந்து அடுத்து (படுத்தபடி) நமஸ்காரம் செய்வார்கள். இப்படியே தொடர்ந்து நமஸ்காரம் செய்து கோயிலை அடைவார்கள். இதற்கு சயன தபஸ் என்று பெயர்.