பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் வாசுகி தீர்த்த குளத்தை பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பரமக்குடியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் நயினார்கோவில் உள்ளது.இங்கு அருள்பாலிக்கும் சௌந்தரநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் என சிறப்பு வாய்ந்ததாகும். இதன்படி கோயில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளம் கடந்த மாதங்களில் பெய்த மழையால், தற்போது கோடை காலத்திலும் வற்றாமல் உள்ளது. ஆனால் குளம் பராமரிக்கப்படாமல் உள்ளதுடன், சுற்றியுள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் கலக்கும் படி விட்டுள்ளனர். இக்கோயிலுக்கு தோஷ நிவர்த்தி மற்றும் முடி காணிக்கை செலுத்த வருவோர் இக்குளத்தில் குளிப்பது வழக்கம். ஆனால் கழிவுநீர் கலக்கப்படுவதால் பக்தர்கள் வேதனை அடைகின்றனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் கோயிலில் பக்தர்கள் அனுமதி இன்றி நித்திய பூஜைகள் மட்டும் நடக்கிறது. தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் குளம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவரும் நிலையில், கவனிப்பாரற்று இருக்கிறது. ஆகவே அரசு இதுபோன்ற கோயில் குளங்களை சீரமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.