ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வெளியே ராமநாதபுரம் மாவட்டத்தில் 66 புனித தீர்த்தங்கள் உள்ளது. அக்காலத்தில் பக்தர்கள் இத்தீர்த்தங்களை நீராடிய பின் கோயிலுக்குள் நீராடி செல்வது வழக்கம். அதன்படி திருக்கோயிலுக்கு சொந்தமான சீதா தீர்த்தம் குளம் ராமேஸ்வரம் துளசிபாபா மடம் அருகில் உள்ளது. இங்கு 15 ஆண்டுக்கு முன்பு வரை பக்தர்கள் நீராடி தரிசித்தனர். . காலப்போக்கில் பக்தர்கள் நீராட முடியாதபடி கோயில் நிர்வாகம் தீர்த்தத்தை சுற்றி சுவர் எழுப்பியது. இதன்பின் தீர்த்த குளத்தை பராமரிக்க கோயில் நிர்வாகம் முன்வராததால், சுற்று சுவர் உடைந்து, பிளாஸ்டிக் பை, கழிவு குப்பைகளை அப்பகுதியில் வசிப்பவர்கள் கொட்டுவதால், தீர்த்தம் துர்நாற்றம் வீசி சுகாதார கேடாக காட்சியளிக்கிறது. ராமாயண வரலாற்றில் தொடர்புடைய இத்தீர்த்தத்தை சீரமைத்து, குப்பையை கொட்டுபவர்கள் மீது இந்து அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.