பதிவு செய்த நாள்
07
மே
2021
06:05
அருப்புக்கோட்டை: ஒரே கல்லில் நான்கு அரிய வகை சிற்பங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள நான்கு சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுடன் கூடிய அரிய வகை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. தேவாங்கர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் செல்லப்பாண்டியன் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர்கள் ஸ்ரீதர், செல்வம், மாரீஸ்வரன் ஆகியோர் கள ஆய்வு செய்து கண்டறிந்தனர்.
* அரியவகை சிற்பம்
செல்லபாண்டியன், பேராசிரியர் : இந்த சிற்பம் ஒரே கல்லினால் ஆனது. முன்பக்கத்தில் ஆஞ்சநேயர் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் தோலில் பொருட்களை சுமந்து செல்லுவது போல, இரண்டு பக்கமும் சூரியனும் சந்திரனும் காட்டப்பட்டுள்ளது. ஆஞ்சநேயருக்கு மேலே விநாயகர் சிற்பம் உள்ளது. எனவே, இது ஒரு வணிக சின்னமாக இருக்கலாம். இந்த சிற்பத்தின் வலது பக்கத்தில் திரிசூலம் உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்படுவது சிவன் கோயிலுக்கு தானம் அளிப்பதை குறிக்கும் குறியீடு. இந்த சிற்பம் இப்பகுதியில் இருந்த சிவன் கோயிலுக்கு தானமாக நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதை குறிப்பதாக இருக்கலாம். தமிழகத்தில் இதுபோன்ற சிற்பம் இதுவரை கண்டறியப்படவில்லை, என தொல்லியல் அறிஞர்கள் கருதுவதால், இந்த அரிய சிற்பத்தை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து புதிய வரலாற்றுத் தகவல்களை கண்டறிய முடியும்.
* சிதைந்த நிலையில் . . . .
செல்வம், ஆய்வாளர், பாண்டியநாடு பண்பாட்டு மையம்: இந்த ஒற்றைக்கல் சிற்பத்தின் பின்பகுதியில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் படிக்க இயலாத சிதைந்த நிலையில் உள்ள இந்த கல்வெட்டில் இவ்வூரின் பெயர், கண்மாய் மற்றும் மடை பற்றிய எழுத்துக்கள் உள்ளன. எனவே, இது மடை அல்லது கோவிலுக்கு நில தானம் குறித்த செய்தியை தருவதாக இருக்கலாம். இடது பக்கத்தில் ஒரு நாயக்கர் காலத்தைச் சேர்ந்த வீரன் சிற்பமும் உள்ளது. சருகு கொண்டையுடன் உடையுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் இந்த வீரன் உள்ளான். இப்பகுதியின் தலைவனாக கல்வெட்டில் அறியக்கூடிய முத்தப்ப நாயக்கராக இருக்கலாம். மேலும் இந்த வீரனே இந்த தளத்தை வழங்கியவன் ஆகவும் இருக்கலாம், என அறியமுடிகிறது.