ஈத்துவக்கும் இன்பப்பெருநாளான ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டது.நோன்பிருந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்ததன் மூலம், அவனிடம் இருந்து கருணையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டோம். சுவனத்தின் (சொர்க்கம்) பாதையை வலுப்படுத்தியுள்ளோம். பசியின் கொடுமையை உணர்ந்து, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய தத்துவத்தை உணர்ந்திருக்கிறோம். இந்தத் திருநாளில், உண்டு களித்து மகிழ்ச்சியுடன் இருக்க மார்க்கம் அனுமதித்திருக்கிறது. அதற்காக, வரம்பு மீறி செயல்படக்கூடாது. கேளிக்கை நிகழ்ச்சிகள் நமக்கு ஏற்புடையதல்ல. நோன்பு பெருநாள் தர்மத்தை தொழுகைக்கு முன்னரே கொடுத்து விட வேண்டும். ஆண்களும், பெண்களும் நோன்புப் பெருநாள் தொழுகையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். பெருநாளுக்கு ஆடம்பரமாக ஆடை அணிவதையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஆதரிக்கவில்லை. உமர் (ர-லி) அவர்கள், நபிகளாரிடம் ஒரு பெருநாளன்று, ஒரு பட்டாடையைக் கொண்டு வந்து தந்த போது, “நிச்சயமாக இது பாக்கியமற்றவர்களின் ஆடையாகும்,” என்றார்கள்.எனவே, எளிமையான, சுத்தமான ஆடைகளை அணிந்து மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடி மகிழ்வோம். வஸ்ஸலாம்!