ராமேஸ்வரம்: அரபிக்கடலில் உருவான டவ்டே புயலால் ராமேஸ்வரம் கடலோரத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் படகுகள் தரை தட்டி நின்றது.
டவ்டே புயலால் மன்னார் வளைகுடா பாக்ஜலசந்தி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராமேஸ்வரம் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசுகிறது. இதனால் ராேமஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க மீன்துறை தடை விதித்ததால் ஏராளமான படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. புயல் தாக்கத்தால் நேற்று காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் திடீரென 100 மீட்டர் துாரத்திற்கு உள்வாங்கியதால் கடலோரத்தில் கிடந்த சிவலிங்கம் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது.மேலும் பாம்பன் தெற்குவாடி லைட்ஹவுஸ் பகுதி கடற்கரையில் 200 மீட்டர் துாரம் கடல் உள்வாங்கியதால் கரையில் நிறுத்தி இருந்த நாட்டுபடகுகள் தரை தட்டின. பின் மதியம் 3:00 மணிக்கு பின் கடல்நீர் மட்டம் உயர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.