திருவனந்தபுரம்: திருவாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது.
கேரள மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உள்ள சபரிமலை உட்பட அனைத்து கோவில்களும் திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்தக் கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாய், தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு உதவுகிறது. ஊதியம், ஓய்வூதியம் என, ஆண்டுக்கு ரூ.40 கோடி அளவுக்கு செலவு செய்யப்படுகிறது. கோவிட் காரணமாக கடந்த 2020ம் ஆண்டிலேயே சபரிமலையில் பக்தர்களின் அனுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கோயில் மூலம் கிடைக்கும் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது. இதனால், செலவுகளை மேற்கொள்ள மாநில அரசிடம் தேவசம்போர்ட் நிதி கோரியுள்ளது. தற்போது கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள கோவில்களின் வருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.