பதிவு செய்த நாள்
04
ஜூன்
2021
05:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் புரோகிதர்கள் மொபைல் போனில் பரிகார பூஜை செய்வதால் பக்தர்கள் வரவேற்கின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தரும் ஏராளமான பக்தர்கள், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடையவும், திருமண தடை நீங்க, பரிகார பூஜை செய்ய புரோகிதர்களிடம் திதி, தர்ப்பணம், திலக ஹோம பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் நீராடுவது வழக்கம். ஆனால் ஏப்.,21 முதல் ராமேஸ்வரம் கோயில் மூடல், முழு ஊரடங்கினால் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடவும், கோயிலில் தரிசிக்க முடியாமல் வேதனை அடைந்தனர். நேற்றுடன் 44 நாட்களாக பக்தர்கள் ராமேஸ்வரம் வர முடியாமல், பரிகார பூஜைகள் செய்ய முடியவில்லை.
இதனை தவிர்க்க வெளியூரில் வசிக்கும் பக்தர்கள், ராமேஸ்வரத்தில் புரோகிதர்களிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பக்தர்கள் விரும்பும் பெயரில் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் திலக ஹோமம், திதி, தர்ப்பண பூஜை செய்து தரிசிக்கின்றனர். இந்த ஆன்லைன் பூஜைக்கு பக்தர்களிடம் வரவேற்பு உள்ளதால், ராமேஸ்வரத்தில் பல புரோகிதர்கள் வீடுகளில் இது போன்ற பூஜைகள் நடக்கிறது.