பதிவு செய்த நாள்
10
ஜூன்
2021
05:06
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தென் மாவட்டங்களில் 554 வகை சொத்துக்கள் இருப்பது அறநிலையத்துறையின் நிலஉரிமை ஆவண பதிவேட்டில் தெரியவந்துள்ளது. இக்கோயிலுக்கு மன்னர்கள், செல்வந்தர்கள் என பலரும் தங்கள் சொத்துக்களை எழுதி வைத்தனர். பதிவேடுகளின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் அதிகாரமிக்க சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்கும் முயற்சியில் அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக நேற்று அரசால் தமிழக கோயில்களின் நிலஉரிமை ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மதுரை உட்பட தென்மாவட்டங்களில் 554 சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. மதுரையில் கட்டடங்கள், நிலங்கள் உள்ளன.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், நத்தம் புலியூர், திருச்சி மணப்பாறை, கரூர் குளித்தலை, தோகைமலை, சிவகங்கை திருப்புவனம் பகுதிகள், இடைக்காட்டூர், காரைக்குடி பகுதி, மதுரை நகர், கிராமங்களில் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு மதுரை மாவட்டத்தில் 117 வகை சொத்துக்களும், கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு 38 வகை சொத்துக்களும் உள்ளன. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 280 வகை சொத்துகள் உள்ளன. நேற்று மதுரையில் இக்கோயில்களின் நில ஆவணங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அறநிலையத்துறையின்கீழ் உள்ள பிற கோயில்களின் சொத்து விபரங்கள் அடுத்தடுத்து பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.