பதிவு செய்த நாள்
10
ஜூலை
2021
10:07
பல்லடம்: அமாவாசையை முன்னிட்டு, பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், சிறப்பு வேள்வி வழிபாடு நடந்தது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு, நீண்ட நாட்களுக்கு பின் கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கும் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், நேற்று, அமாவாசையை வழிபாடு நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று, மகா மிருத்தியுஞ்ஜய சிறப்பு வேள்வி வழிபாடு, மற்றும் அபிஷேக ஆராதனைகளை நடத்தினார். அவர் பேசுகையில், நேற்று திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய அமாவாசை நாளாகும். இது சிவனின் அம்சம். இந்நாளில், முன்னோர்களின் திதி, சாந்தி உள்ளிட்டவற்றை செய்தால் மிகவும் பலனளிக்கும். நீண்ட நாட்களுக்குப் பின் வரும் இந்த விசேஷ நாளில், முன்னோர்களை வழிபட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்றார். வேள்வி வழிபாட்டை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சமேதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.