பதிவு செய்த நாள்
10
ஜூலை
2021
02:07
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, சுவாமி தரிசனம் செய்த அவருக்கு பட்டாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். அதன் பின், அவர் கூறியதாவது: கடந்த பத்தாண்டில் கேட்பாரற்று, பராமரிக்கப்படாமல் உள்ள தமிழக கோயில்களில் ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குடமுழுக்கு நடத்தாத கோயில்களின் எண்ணிக்கைகளை கண்டறிந்து, விரைவில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கோசாலையில் பாதுகாப்புடன் சிறப்பாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோயில் அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து, அங்கு மேலும் ஒரு கோசாலையை ஏற்படுத்தி பராமரிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளேன். கடந்த ஆட்சியில், 5 ஆண்டுகள் பணிபுரிந்த கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் என்று,110 விதியின் கீழ் அறிவித்தனர். போகிற போக்கில் அறிவித்துவிட்டு, செயல்படுத்தாமல் விட்டு சென்ற அந்த அறிவிப்பை, திமுக ஆட்சியில் செயல்படுத்தி உள்ளோம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன. மற்ற இடத்தில் குடியிருப்புகளும், கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளாக உள்ளது. அதில் இருப்பவர்கள் உரிய மனு அளித்தால், வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நோய்த் தொற்றில் இருந்து விடுபட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுவோம், மக்களும் வேண்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.