பதிவு செய்த நாள்
11
ஜூலை
2021
05:07
பாட்னா: பீஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள உலக புகழ்பெற்ற புத்த ஸ்தூபியை வெள்ள நீர் சூழ்ந்ததால், அந்த பகுதி நீச்சல் குளம் போல் காட்சியளித்தது.
பீஹார் மாநிலம் பாட்னாவில் இருந்து 120 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள கேசரியாவில் உலக புகழ்பெற்ற புத்த ஸ்தூபி உள்ளது. அம்மாநிலத்தில் தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுள் ஒன்றான இந்த ஸ்தூபம், கடந்த 1988-ம் ஆண்டில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், ஸ்தூபியை நினைவுச்சின்னங்களாக பராமரிக்கப்பட்டு வருவதால், சுற்றலா பயணிகளின் வருகையும் அதிகரித்தது.
இந்நிலையில், நேபாளத்தின் கந்தக்கின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், வடக்கு பீஹார் மாவட்டங்களில் ஆற்றின் கீழ் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனையடுத்து, புத்த ஸ்தூபி கட்டமைப்பை வெள்ள நீர் சூழ்ந்ததால், அந்த இடத்தை சுற்றி நீச்சல் குளம் போல் காட்சியளித்தது. கடந்தாண்டும் இதேபோல் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த நிகழ்வு நடந்துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கபில் அசோக் கூறுகையில், ‛கடந்த ஆண்டும், அதைச் சுற்றி நீர் தேக்கம் ஏற்பட்டது. இது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டும் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது; வெள்ள நீரை வெளியேற்றுவது பெரிய சிரமம், என்றார்.