பதிவு செய்த நாள்
19
ஜூலை
2021
04:07
திருப்பூர்;சமீபத்தில், ஒரு கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், தொழில், மழை, கல்வி வளம் சிறப்பாக இருக்க, கிராம தேவதைகள் வழிபாடு அவசியம் என்று, வலியுறுத்தியிருந்தார்.ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற காவல் தெய்வங்கள், குலதெய்வக் கோவில்களுக்கு, பக்தர்கள் கூட்டம், முன்னெப்போதையும் விட அதிகரித்து வருகிறது.
ஆடி மாதமும் துவங்கியுள்ளதால், மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் குவிகின்றனர்.கொங்கு மண்டலத்தில், அண்ணன்மார் சாமி வழிபாடு சிறப்பானது; பல்வேறு ஊர்களில் அண்ணன்மார் சாமி கோவில் இருக்கும். பொன்னர், சங்கர் அண்ணன்மார் என்ற பெயரில் தெய்வமாக வழிபடுகின்றனர்.பெரிய குதிரைகளின் மேல் அமர்ந்தவாறு பொன்னர், சங்கர் சிலைகள் அமைந்திருக்கும். அண்ணன்மார் சாமி கதைப் பாடல் பிரசித்தி பெற்றது. இக்கதையை உடுக்கையடித்து பாடலாகப் பாடுவர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில், கிராம கோவில்களாக இருந்தவை, தற்போது பிரசித்தி பெற்ற தலங்களாகவும் மாறியிருக்கின்றன.வழிபட ஏற்ற தருணம்பக்தர்கள் கூறியதாவது:ஆடியில் துவங்கி, மார்கழி வரை தட்சணாயன காலம். வழிபாடு, பூஜைகளுக்கு இது ஏற்ற தருணம்.குறிப்பாக, குலதெய்வங்களை வழிபடுவதற்கு ஆடி மாதம் ஏற்றது. கிராம தெய்வங்களுக்கான மாதம் என்பதால், எல்லை தெய்வ வழிபாடு தற்போது களைகட்டியுள்ளது. மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி, அங்காள ஈஸ்வரி, காளியம்மன், சப்த கன்னிகை, மதுரைவீரன், காத்தவராயன், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, கருப்பராயன், அய்யனார் முதலான தெய்வங்கள் அதிகளவில் வழிபடப்படுகின்றன.நேர்த்திக்கடன்கடந்த ஒன்றரை ஆண்டாக, தங்கள் கிராமங்களுக்கோ, குலதெய்வ கோவிலுக்கோ செல்லாதவர்கள் தற்போது அதிகளவில் இக்கோவில்களுக்கு செல்கின்றனர்.கொரோனா குறைய வேண்டியும், மக்கள் நலன் வேண்டியும் வேண்டுதல்கள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள், மொட்டையடித்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தியும் வருகின்றனர்.சில கோவில்கள், திருவிழாக்களின் போது மட்டுமே திறக்கப்படுபவை. தற்போது திருவிழாவாக கொண்டாட முடியாவிட்டாலும், வழிபாடு என்பது, உரிய காலத்தில் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.