பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்கள், கல்லூரி, பள்ளிகளில் வேலை வாங்கி தருவதாக கூறும் நபர்களிடம் ஏமாற வேண்டாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பல்வேறு கோயில்கள், பாலிடெக்னிக், கலை,பண்பாட்டு கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி, பள்ளிகள் உட்பட பல்வேறு சார்பு நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது இவற்றின் காலிப்பணியிடங்களை நிரப்ப நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும். முறையாக சட்டவிதிகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.
இந்நிலையில் பழநி முருகன் கோயில், உப கோயில்கள், கல்லூரிகள், பள்ளிகளில் வேலை பெற்று தருவதாக தனிநபர்கள் கூறி வருவதாக கோயில் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து கோயில் இணை ஆணையர் நடராஜன் அளித்துள்ள அறிக்கையில் திருக்கோயிலில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள், பாலிடெக்னிக், பள்ளிகள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் தொடர்பாக தனிப்பட்ட எந்த நபரையும் தொடர்புகொண்டு ஏமாற வேண்டாம். என அறிவித்துள்ளார்.