கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்தை பாதுகாக்க வழக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2021 07:07
மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தின் கலைநயத்தை மறைக்கும் வகையில் உள்ள கட்டுமானங்களை அகற்றி, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. சின்ன அனுப்பானடி உதயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் டவுன்ஹால் ரோட்டில் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக தெப்பக்குளம் இருப்பது தெரியாத அளவிற்கு நான்கு பக்கமும் மறைக்கப்பட்டுள்ளது. கலைநய மதிப்பை பொருட்படுத்தாமல் 4 புறமும் வணிக நோக்கில் பல கட்டுமானங்கள் அமைக்கப்பட்டன. தெப்பக்குள நீர் வழித்தடம் சேதமடைந்துள்ளது. கழிவு நீர் கலப்பதால் தெப்பக்குளம் மாசடைகிறது. இவ்விவகாரத்தை உயர்நீதிமன்றம் 2011 ல் தானாக முன்வந்து விசாரித்து உத்தரவிட்டதன் பேரில் குப்பைகள் குவிப்பது, கழிவு நீர் கலப்பதைத் தடுக்க மற்றும் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின் மேல்நடவடிக்கை இல்லை. தெப்பக்குளத்தில் குப்பைகள் குவிப்பது, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். இதுகுறித்து அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு,இதுபோல் நிலுவையிலுள்ள வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும், என்றது.