ஸ்ரீகாளஹஸ்தி : பிரபல ஆன்மிக தலமான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமன்றி வெளிநாட்டு பக்தர்களும் இங்கு கோயிலில் நடக்கும் ராகு - கேது சர்ப்ப தோஷ பூஜைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதோடு தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். மேலும் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் தங்களின் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். இதனால் வருடாந்திர கோயில் வருமானம் 100 கோடிக்கும் மேலாக வருகிறது என்று கோயில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்டியல்களில் பக்தர்கள் மூலம் செலுத்தப்படும் காணிக்கைப் பணத்தை வங்கி அதிகாரிகள் மற்றும் கோயில் அதிகாரிகளின் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் 20 நாட்களுக்கு ஒருமுறை காணிக்கைப் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 7 மணி முதல் கோயில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் உண்டியல்களிலிருந்தப் பணத்தை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த கிரண் 30 என்ற கோயில் ஒப்பந்த ஊழியர் ₹75 ஆயிரம் ரொக்கப்பணம் உட்பட தங்கச் சங்கிலியையும் திருட முயற்சித்துள்ளார் .இதனை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கவனித்த கோயில் அதிகாரிகள் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சிறப்பு காவல் படயினரிடம் ஒப்படைத்தனர் . அதனைத் தொடர்ந்து ஸ்ரீ காளஹஸ்தி நகர போலீசாருக்கு புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீகாளஹஸ்தி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் குமார் மற்றும் போலீசார் கிரனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.