பதிவு செய்த நாள்
24
ஜூலை
2021
01:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும், 14 கி.மீ., சுற்றளவு துாரமுள்ள மலையை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்வர். கொரோனா ஊரடங்கால், கடந்தாண்டு மார்ச் முதல், கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. நேற்று ஆடி மாத பவுர்ணமி திதி, காலை, 10:38 மணி முதல், இன்று காலை, 8:51 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டிருந்தார். இதனால், பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்த்தனர். மேலும், கலெக்டர் உத்தரவை மீறி கிரிவலம் சென்றால், அவர்களை தடுக்க கிரிவலப்பாதை முழுவதும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வழக்கம்போல் பக்தர்கள் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் பக்தர்கள் வருகை எண்ணிக்கை குறைவாக இருந்ததால், கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.