பதிவு செய்த நாள்
26
ஜூலை
2021
04:07
திருப்புத்தூர்: திருப்புத்துார் பகுதி வரலாறு மற்றும் தொன்மையான தலமாகும். இப்பகுதியில் புராதன கோயில்கள் ஏராளமாக உள்ளன. அத்துடன் தொன்மையான பல குடவரைக் கோயில்களும் உள்ளன. அதில் மிகவும் பிரபலமானது பிள்ளையார்பட்டி குடவரைக் கோயில் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு மட்டுமல்ல குன்றக்குடி,. திருக்கோளக்குடி, மகிபாலன்பட்டி, பிரான்மலை...என்று பல குடவரைக் கோயில்கள் இப்பகுதியில் உள்ளன. அதில் மிகவும் சிறப்பானது குன்றக்குடி மலை அடிவாரத்தில் உள்ள ‛கீழைக் கோயில்கள்’ எனப்படும் நான்கு குடவரை கோயில்கள். மலை உச்சியில் உள்ள மலைக்கோயிலுக்குத் தான் பக்தர்கள் செல்வது வழக்கம். அடிவாரத்தில் யானை தங்குமிடம் அருகில் உள்ள கோபுரம் இல்லா வாயிலினுள் சென்றால் இந்த குடவறை கோயில்களை தரிசிக்கலாம்.
குடவறைகளும், சிற்பங்களும்: முதலில் சண்டேஸ்வரர் பின்னர் மலைக்கொழுந்தீசர், மூன்றவதாக அண்ணாமலையார் அடுத்து சுந்தரேஸ்வரர் ஆகியோருக்கு ஒரே பாறையில் நான்கு குடவறைகள் உள்ளன. முற்காலப் பாண்டியர்களால் 1200 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கோயில்களுக்குள் புடைப்பு சிற்பங்களாக சிவலிங்கங்கள் கருவறைக்குள் உள்ளன. வெளியே முக மண்டபத்தில் திருமால்,கருடன், ஆடல்வல்லான்,வலம்புரி விநாயகர்,சேத்ர பாலர்கள் ஆகியோருக்கு அழகிய புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இதில் வலம்புரி விநாயகரின் நெற்றியில் சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது. விநாயகரின் கையிலும் சிவலிங்கம் உள்ளது.
மலைக்கொழுந்தீசர் குடவறையில் உள்ள புடைப்புச் சிற்பங்களுக்கு சுதை வடிவிலான அமைப்பில் பல வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த குடவறை முழுவதுமாக பாதுகாக்கப்படுகிறது. குடவறை கோயில்களுக்கு முன்பாக உள்ள இசைத் தூண்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல்மண்டபம் உள்ளது. ஜமீன் வெங்களப்பநாயக்கரால் 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பல புராதன சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. குடவறை கோயில்கள் ஒரு அரிய வரலாறு பொக்கிஷம் என்றால். இக்கோயில்களுக்கு மேலே உள்ள குன்றின் கீழ் சமணர் படுகைகளும் உள்ளன. 6- ம் நூற்றாண்டைச் சேர்ந்தது இந்த படுகைகள். ஞானியார் மடம் எனப்படும் இந்த படுகைகள் தமிழர்களால் உருவாக்கப்பட்டு பின்னர் சமணர், பெளத்தர் போன்றவர்களால் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.இந்த குன்றில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் காணப்படுகிறது.இந்த வரலாறு கலைச் சின்னங்கள் தொல்லியல்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளன. இல்லை. பார்வையாளர்கள் தொல்லியல் உதவியாளரை 9486561501ல் தொடர்பு கொள்ளலாம்.
இங்கு வரும்பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் , அடிப்படை வசதிகள் இல்லை. ஒலி, ஒளி அமைப்பு,புல்வெளிகள், பூங்கா, கற்கள் பதிக்கப்பட்ட தளங்கள் இல்லை. நிதிப்பற்றாக்குறையால் தொல்லியல் சின்னங்கள் புறக்கணிக்கப்படுகிறது. தொல்லியல் துறையினர் கூறுகையில், பழமை மாறாமல் நடைபாதை தளம் புதுப்பிப்பு உள்ளிட்ட சில பணிகள் விரைவில் நடைபெற உள்ளன என்றனர். தொல்லியல் சின்னங்கள் மூலம் வரலாறை மக்களிடம் சேர்ப்பதில் தொல்லியல் துறையினர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.