பதிவு செய்த நாள்
27
ஜூலை
2021
01:07
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 87வது ஜெயந்தி விழாவில், மடத்தின் மருத்துவ சேவைக்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார்.
காஞ்சிபுரம் மடம் காஞ்சி காமகோடி, 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 2018ம் ஆண்டு, வயது மூப்பு காரணமாக உடல் நலமின்றி முக்தியடைந்தார்.அவரது, 87வது ஜெயந்தி விழா, ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார்.முன்னதாக, காஞ்சி மடம் பிருந்தாவனம் சென்று, 70வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசிபெற்றார்.நிகழ்ச்சியில், ஆந்திர மாநில முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வர சவுத்ரி எழுதிய, வியட்நாம் மற்றும் கம்போடியாவில் இந்து கோவில் என்ற தெலுங்கு நுால் வெளியிடப்பட்டது. நுாலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காணொலி காட்சி மூலம் வெளியிட்டு, சிறப்புரை வழங்கினார்.கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தேச பக்தி, தெய்வ பக்தி, குரு பக்தி போன்ற புனித தன்மை நம்மை ஈர்த்தது. இந்த சமுதாயம், நாட்டு மக்களுக்கு அவரது ஆசி கிடைக்கட்டும், என்றார்.சங்கர மட மருத்துவ சேவைக்காக, ஒரு கோடி ரூபாய் நிதியை, பம்மல் விஸ்வநாதனிடம் கவர்னர் வழங்கினார்.தொடர்ந்து நலிந்து வரும் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு, கவர்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.