பதிவு செய்த நாள்
29
ஜூலை
2021
11:07
கோவை : புதிதாக கண்டெடுக்கப்பட்ட பழங்கால கற்சிலைகள், கோவை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கோவை நேரு ஸ்டேடியத்தில் அரசு அருங்காட்சியகம் உள்ளது; 200க்கும் மேற்பட்ட பழங்கால கற்சிலைகள், கல்வெட்டுகள், மரச்சிற்பங்கள் மற்றும் தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக, மூடப்பட்டிருந்த அருங்காட்சியகம், பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிடைத்த, 10 மற்றும், 15ம் நுாற்றாண்டு கற்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியக காப்பாளர் முருகவேல் கூறியதாவது:கடந்த மார்ச் மாதம், அன்னுார் பகுதியில் நிலத்தை தோண்டியபோது காளி சிலை, போர் வீரன் சிலை, சோஸ்டா தேவி சிலை, விநாயகர் சிலை மற்றும் ஒரு கோபுர கலசம் கண்டெடுக்கப்பட்டன. அச்சிலைகளை ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள், சோஸ்ட்டா தேவி சிலை, 10ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்றும், காளி மற்றும் போர் வீரன் சிலைகள், 15ம் நுாற்றாண்டை சேர்ந்தவை என்றும், மற்றவை, 19ம் நுாற்றாண்டை சேர்ந்தவை எனவும் தெரிவித்துள்ளனர். அவை, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. காலை, 9:00 முதல் மாலை,5:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.