பதிவு செய்த நாள்
02
ஆக
2021
12:08
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கமுதி மேலராமநதி கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தினர் மேற்கொண்ட ஆய்வில் கி.பி., 8ம் நுாற்றாண்டை சேர்ந்த நிசம்ப சூதனி சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆய்வாளர் செல்வம் கூறியதாவது: ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் அருப்புக்கோட்டை எல்லைப்பகுதியான கமுதி மேலராமநதி கிராமத்தில் இச்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாயக்கர் காலத்தில் மங்கம்மாள் பெருவழிச் சாலை என அழைக்கப்பட்ட இவ்வழியில் யாத்திரீகர்கள் பயணித்து இங்குள்ள ராமநதி எனும் நீரோடையில் நீராடி நிசம்பசூதனி அம்மனை வழிபட்டிருக்கலாம். தற்போது இக்கிராமத்தினர் வாழவந்தம்மன் என வணங்கி வந்துள்ளனர், என்றார்.மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன்: நிசம்பசூதனி தலையில் கேசபாரம், மார்பில் நாக கூச்சபந்தம் அணிந்து எட்டு கைகளுடன் காட்சி தருகிறார்.
கைகளில் திரிசூலம், உடுக்கை, கேடயம், மணி ஏந்தியுள்ளார். சில ஆயுதங்கள் தெரியவில்லை. உத்குடிகாசனத்தில் பத்ர பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். கழுத்தில் கந்தி, மாலை என அணிகலன்களும், இடுப்பில் மேகலை, பட்டாடையும் அணிந்திருப்பது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.நிசம்பன் எனும் அரக்கனை வதம் செய்யும் நிலையில் உள்ளதால் நிசம்பசூதனி என அழைக்கின்றனர். இதே போன்ற சிலைகள் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை துறைக்காடு பகுதிகளில் கிடைத்துள்ளது. இதன் காலம் 8ம் நுாற்றாண்டு. காளி நிசம்பனை வென்றதால் அதன் நினைவாக இந்த தெய்வத்தை வழிபடும் மரபு 8ம் நுாற்றாண்டி இருந்து தொடர்ந்து இருந்துள்ளது, என்றார்.