பதிவு செய்த நாள்
02
ஆக
2021
12:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் ஆக. 1 முதல், மூன்று நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய, கலெக்டர் முருகேஷ் தடை விதித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆடி கிருத்திகை விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்கள் உட்பட அனைத்து கோவில்களுக்கும், பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்ய வருவர். அதிகமான பக்தர்கள் வந்தால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்கள், அருணாசலேஸ்வரர் கோவில், படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவில் உட்பட அனைத்து பிரதான கோவில்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், இன்று முதல், மூன்று நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. ஆகமவிதிப்படி சுவாமி அலங்காரம், பூஜைகளை அர்ச்சகர்கள், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.