பதிவு செய்த நாள்
02
ஆக
2021
01:08
திருச்சி: ஆடிப்பெருக்கு தினத்தன்று, திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், வயலூர் முருகன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்த போது, இந்த கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு நித்திய பூஜைகள் மட்டும் நடைபெற்றது.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாளை (2ம் தேதி), நாளை மறுநாள் (3ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள், பிரசித்தி பெற்ற கோவில்களில், பொதுமக்கள் வழிபாடு நடத்த தடைவிதித்து, மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மாவட்ட நிர்வாக அறிவுரைப்படி வருகிற ஆடி 17 (ஆகஸ்ட் 2 -ம் தேதி) மற்றும் ஆடி 18 (ஆகஸ்ட் 3-ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகை கிழக்கு கோபுரம் , தெற்க்கு கோபுரம் , வடக்கு கோபுரம் மற்றும் அம்மாமண்டபத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, கீதபுரம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை போன்ற இடங்களில் பொதுமக்கள் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.