ஊத்துக்கோட்டை: ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஊத்துக்கோட்டை, ஏரிக்கரையில் உள்ள கிராம தேவதையான செல்லியம்மன் கோவிலில், செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். ஆடி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, காலை, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின், அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் கூழ் ஊற்றி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.