மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தடையைமீறி ஆடிப்பெருக்குவிழா கொண்டாடப்பட்டது. காவிரி அன்னைக்கு படையலிட்டு ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலையின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. திருவிழாக்கள் மற்றும் மதவழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆடி பெருக்கு நிகழ்;ச்சியில் பொதுமக்கள் கூட்டம் கூடினால் சமூகஇடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் கடந்த 1ம் தேதி முதல் 9ம்தேதி வரை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூட மாவட்ட ஆட்சியர் லலிதா தடைஉத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிபெருக்கினை கொண்டாட தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களிலும் பக்தர்களுக்கு வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தடையைமீறி பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். அதிகாலை முதலே பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடி வருகின்றனர். மயிலாடுதுறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.