பதிவு செய்த நாள்
07
ஆக
2021
03:08
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த, ஆயத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் கூறினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 13 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்தது.
கடந்த மாதம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலில் ஆய்வு மேற்கொண்டு பக்தர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்ட போதும், இக்கோரிக்கை அழுத்தமாக முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் (நிர்வாகம் மற்றும் திருப்பணி) கள ஆய்வு மேற்கொண்டார். கோவில் முழுவதையும் சுற்றிப்பார்த்த அவர், சுவர் மற்றும் கதவில், கலைநயமிக்க வேலைப்பாடுகளை பார்த்து வியந்தார். கோவிலின் முகப்பில் உள்ள காலணிகள் வைக்கும் இடத்தை, வேறிடத்துக்கு மாற்றவும் ஆலோசனை வழங்கினார். பழமை மாறாமல் கோவிலை பராமரிக்க வேண்டும், என்றார். கோவில் தெப்பக்குளத்தை பார்வையிட்ட அவர், ஏராளமான மீன்கள் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்து, எனது மொபைல் போனில், புகைப்படம் எடுத்துக் கொண்டார். தெப்பக்குளத்தில் நடக்கும் பூஜை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் முடிவில், கூடுதல் ஆணையர் கண்ணன் கூறியதாவது; கோவில் திருப்பணி மேற்கொள்வது குறித்து கோரிக்கை வைத்திருந்தனர். இதில் எந்தெந்த பணிகள் தேவை, தேவையில்லை என்பதை அறிவதற்காகவும், வேறென்ன பணிகள் செய்ய வேண்டியிருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்காகவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, குட முழுக்கு சார்ந்த பணிகள் துவங்கும். அருகேயுள்ள சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலை புனரமைப்பது தொடர்பாக, திட்ட மதிப்பீடு தயாரித்து கமிட்டியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காசிகவுண்டன் புதூர், ஆகாச ராயர் கோவில் குட முழுக்கு தொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.