பதிவு செய்த நாள்
05
செப்
2021
07:09
சென்னை: கோவில் யானைகளை, கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்து, அவற்றின் உடல் நிலையை அறியும்படி, வனத்துறை உயர் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானைகளுக்கு பாகன்களை நியமிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கோவில் யானைகள், வளர்ப்பு யானைகள் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, யானைகளை அடைத்து வைப்பது; வளர்ப்பு யானைகளாக மாற்றுவது; வனத்துறையினரின் துஷ்பிரயோகம் குறித்து விளக்கி, காட்சிப் படங்களை, எல்சா பவுண்டேஷன் என்ற அமைப்பு தாக்கல் செய்தது.
காவிரி ஆற்றின் அருகில், கோவிலுக்கு சொந்தமான வனம் போன்ற சூழ்நிலை உள்ள இடத்தில், இரண்டு யானைகளையும் பராமரிக்கலாம்; விழாக்களின் போது மட்டும், யானைகளை அழைத்து வரலாம் எனவும், ஸ்ரீரங்கம் கோவில் தரப்பில் பரிந்துரை கூறப்பட்டது.இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:பரிந்துரை வரவேற்கத்தக்கது என்றாலும், கோவில் விழாக்கள், சடங்குகளில் யானைகளை பங்கேற்க செய்ய வேண்டுமா என்பதை, மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துள்ளது.தமிழகத்தில் வனப்பரப்பு போதிய அளவில் உள்ளது. யானைகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு காடுகள் இடம் அளிக்கின்றன. வனப் பகுதியை ஆக்கிரமிக்க மனிதர்கள் முயற்சிப்பதால், யானைகளின் நடமாட்டத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தனி நபர் வசமும், கோவில்கள் வசமும் வளர்ப்பு யானைகள் உள்ளன. வன அதிகாரிகளும், யானைகளை பயன்படுத்துகின்றனர்.தமிழகத்தில், வளர்ப்பு யானைகள் குறித்த விபரங்களை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தயாரிக்க வேண்டும். யானைகளின் வயது, பாலினம் என அனைத்து விபரங்களையும் வீடியோ பதிவும் செய்ய வேண்டும்.கோவில் யானைகளைப் பொறுத்தவரை, தகுந்த அதிகாரிகளை மருத்துவருடன் அனுப்பி, அவற்றின் உடல் நிலையை ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் அனைத்துக்கும், இந்த நடவடிக்கையை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மேற்கொள்ள வேண்டும்.வன அதிகாரிகள் வசம் உள்ள யானைகள் குறித்தும், இதேபோல் விபரங்களை தயாரிக்க வேண்டும். அந்த யானைகளை எப்படி பயன்படுத்துகின்றனர்; எப்படி பிடிபட்டது என்ற விபரங்களையும் அளிக்க வேண்டும். வன அதிகாரிகளால், யானைகள் வணிகம் நடப்பதாக கூறுவது குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு, மாநில அரசு துறைகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணை, வரும் 24க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.