திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகேயுள்ள எம்.புதூரில், இறந்த கோயில் காளையை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, அடக்கம் செய்தனர். சிவகங்கை, எம்.புதூரில் உள்ள கண்டிக்கருப்பர் சுவாமி கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக கோயில் காளை வளர்க்கப்பட்டது. இந்த பகுதியில் நடக்கும் அனைத்து மஞ்சு விரட்டுகளிலும், இக்காளை பங்கேற்று சாகசம் செய்துள்ளது. இந்த காளை நேற்று இறந்தது. கிராம மக்கள் ஊர் மந்தையில் இக்காளையை பூக்களால் அலங்கரித்து அஞ்சலி செலுத்தினர். மாலையில், வாண வேடிக்கைகளுடன்,தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக, மாட்டு வண்டியில் காளையின் உடலை எடுத்துச் சென்று கோயில் அருகே அடக்கம் செய்தனர்.