சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் 120 அடி தேர்வடம் தயாரிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பகுதியில் கயிறு உற்பத்தி தொழில் பல ஆண்டுகளாக நடக்கிறது. மாநிலத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள கோயிலுக்கு இங்கிருந்துதான் தேர் வடம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. மேட்டுப்பாளையம் வெங்கடாஜலபதி கோயில் தேருக்கான வடக்கயிறு சிங்கம்புணரியில் நேற்று தயாரிக்கப்பட்டது. 120 அடி நீளத்தில் 4 வடம் தயாரிக்கப்பட்டது. கயிறு உற்பத்தியாளர் மூர்த்தி கூறியதாவது, இப்பகுதியில் பாரம்பரியமாக கயிறு மற்றும் தேர் வடம் தயாரித்து விற்று வருகிறோம். தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து தான் தேர் வடம் செல்கிறது. ஏற்கனவே 500 அடி வரை வடம் தயாரித்து அனுப்பியிருக்கிறோம். தேர் வடம் தயாரிக்கும் பணியில் ஒரே நேரத்தில் 10 முதல் 50 பேர் வரை ஈடுபடுவோம், என்றார்.