பதிவு செய்த நாள்
21
செப்
2021
09:09
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான மகாளய பட்சம் இன்று துவங்குகிறது.மகாளய பட்சம் என்பது, முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு அமாவாசை திதி கொடுக்க மறந்தவர்கள், முடியாதவர்கள், மகாளய பட்சத்தில் திதி கொடுப்பதால், 12 மாதங்களிலும் திதி கொடுத்ததற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, முன்னோர் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களும் மகாளய பட்ச காலம்.
இதில், பக்ஷம் என்பது, 15 நாட்களை குறிப்பிடும். புரட்டாசி பவுர்ணமியில் துவங்கி அமாவாசை வரை உள்ள, ௧௫ நாட்களே மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது. இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்தது. மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை நினைத்து, தர்ப்பணம் செய்ய வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு மாத அமாவாசையில், நம் உறவினர் 12 பேருக்கு மட்டுமே தர்ப்பணம் செய்கிறோம். இந்த மகாளய பட்சத்தில் தான், அனைத்து உறவினருக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது.
மகாளய பட்சத்தில் வரும் பரணியை, மஹாபரணி; அஷ்டமியை மத்பாஷ்டமி; திரயோதசியை கஜச்சாயை என்றும் அழைக்கின்றனர். கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற ஆன்மிக நுால்களில், மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில், நம் முன்னோர் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். அந்த சிறப்பு மிக்க மகாளய பட்சம் இன்று துவங்கி, அக்., 6ம் தேதி அமாவாசையோடு நிறைவு பெறுகிறது. இதில், வரும் 24ல் மகா பரணியும், 29ல் மத்தியாஷ்டமியும், அக்., 6ல் மகாளய அமாவாசையும் தர்ப்பணம் செய்ய விசேஷ நாட்களாகும். -- நமது நிருபர் -