பதிவு செய்த நாள்
05
அக்
2021
10:10
சென்னை- -திருமலை சிறப்பு தரிசனத்திற்காக, ஆன்-லைன் வாயிலாக டிக்கெட் பெறும் திட்டத்தில் உள்ள பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும், என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறினார்.
திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக, புதுச்சேரி மாநில ஆலோசனை குழு தலைவராக, இரண்டாவது முறையாக தொழிலதிபர் ஏ.ஜெ.சேகர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள பெருமாள் கோவிலில் பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுப்பா ரெட்டி பங்கேற்று, பொறுப்புக்கான சான்றிதழை வழங்கினார்.பின், சுப்பா ரெட்டி கூறியதாவது:சென்னை தி.நகரில் அமைக்கப்பட்டு வரும் பத்மாவதி தாயார் கோவில் திருப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன; ஓராண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.திருப்பதி அலிபிரியில் கோசாலை, கோ கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு, முதன்முறையாக கோ துலாபாரம் கொடுக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது. ஆந்திர முதல்வரால், 11ம் தேதி துவக்கப்பட உள்ளது.தேவஸ்தான பக்தி சேனல், தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஹிந்தி, கன்னடம் மொழிகளில் ஒளிபரப்பும் திட்டத்தையும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி துவக்க உள்ளார்.தமிழகத்தில் இருந்து திருமலைக்கு, ஏராளமான பக்தர்கள் நடந்து வந்து பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.
அவர்களின் வசதிக்காக, சென்னை- - திருப்பதி இடையே, 140 கி.மீ., சாலை மார்க்கத்தில் 30 கி.மீ., துாரத்திற்கு ஒரு தங்குமிடம் அமைக்கப்பட உள்ளது. குளித்து, சாப்பிட்டு ஓய்வெடுக்கும் வசதியுடன் அமைக்கப்படும். சென்னையில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைக்க, ராஜிவ்காந்தி சாலை கிழக்கு கடற்கரை சாலையில் இடம் பார்க்கப்பட்டுள்ளது. விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி, கட்டுமானப் பணி துவக்கப்படும்.சென்னை, ராயப்பேட்டையில், 2 ஏக்கர் இடம் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக உள்ளது. அங்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் திருமண மண்டபம் கட்டப்படும்.திருமலை சிறப்பு தரிசன ஆன்-லைன் டிக்கெட் பெறுவதற்கான இணையதளம், டிக்கெட் வெளியிடும் நாளில் முடங்கிப் போகிறது என்ற புகார்கள் வருகின்றன.
நாடு முழுதும் ஒரே நேரத்தில் டிக்கெட் பெற முயற்சிப்பதாலும், குறைந்த அளவில் அனுமதி அளிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளாக டி.சி.எஸ்., நிறுவனம், தரிசன டிக்கெட் தொடர்பான தொழில்நுட்ப சேவையை இலவசமாக செய்து வருகிறது. இதனுடன், ஜியோ நிறுவனமும் 25ம் தேதி முதல் இணைந்து, இப்பணியில் ஈடுபட உள்ளது.பணம் செலுத்துவதற்கான வங்கி, சர்வர்களும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, ஒன்றரை மணி நேரத்தில், 2.5 லட்சம் டிக்கெட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன. எனவே, இப்பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.