பதிவு செய்த நாள்
05
அக்
2021
01:10
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நாளை மகாளய அமாவாசை வழிபாட்டுக்கு, பக்தர்கள் வர வேண்டாம், என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.உடுமலை அருகே, திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடி, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை வழிபாடு சிறப்பாக நடக்கும்.
இந்நாளில், தமிழகம், கேரள மாநிலங்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, பாலாற்றின் கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து, மும்மூர்த்திகளையும் வழிபடுகின்றனர்.மேலும், விவசாயிகள், வேளாண், கால்நடை செல்வம் பெருக வேண்டி, மாடு, குதிரை வண்டிகளில், வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், திருமூர்த்திமலைக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவாமிகளுக்கான தினசரி பூஜைகள் மட்டும் நடக்கிறது.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, மகாளய அமாவாசை தினமான, நாளை (6ம் தேதி) கோவில்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.எனவே, திருமூர்த்திமலை கோவிலில் சுவாமி தரிசனத்திற்கும், தர்ப்பணம் கொடுக்கவும், திதி செய்யவும் அனுமதியில்லை, என்றனர்.ஆனைமலைஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மகாளய அமாவாசையன்று பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கும், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் செய்யவும் அனுமதியில்லை என, மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.மேலும், விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.