பதிவு செய்த நாள்
05
அக்
2021
03:10
சென்னை : சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 46 கிரவுண்டு நிலம், ராமகிருஷ்ணா மடம் சாலையில் அமைந்துள்ளது. அந்த இடம் விளையாட்டு மைதானமாக உள்ளது.அதை ஏழை, எளிய மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.அவர் கூறியதாவது:கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம், பி.எஸ்., பள்ளியிடம் இருந்து மீட்கப்பட்டு, கோவிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது.இந்த இடத்திற்கான வாடகை நிலுவை பணம், 1 கோடி ரூபாயை பள்ளி நிர்வாகம் தர வேண்டியுள்ளது. முதல் தவணையாக, 18 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம், ஏழை மாணவர்கள் விளையாடுவதற்காக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழகம் முழுதும் கோவில்களுக்கு சொந்தமான, 5,000 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 1,130 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில், 188 வழக்குகள் நிலுவையில் உள்ளன.தமிழக கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், எல்லைக்கல் ஊன்றி, தனி அடையாளத்தில் எழுதப்படும். கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வின் போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் காவேரி செய்திருந்தார்.