பதிவு செய்த நாள்
05
அக்
2021
04:10
களியக்காவிளை: திருவனந்தபுரம் நவராத்திரி பூஜைக்கு எழுந்தருளிய குமரி சுவாமி விக்கிரகங்களுக்கு தமிழக–கேரள எல்லையில் கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் முருகன் மற்றும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு நவராத்திரி விழா நாளை (அக்.,6ம் தேதி) துவங்குகிறது. அதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து எழுந்தருளி வந்த சுவாமி விக்கிரகங்கள் நேற்று முன்தினம் இரவு குழித்துறை மகாதேவர் கோயிலில் தங்கியது. நேற்று அங்கிருத்து புறப்பட்டு படந்தாலுமூடு, வழியாக களியக்காவிளை வந்தது. தமிழக–- கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் வைத்து தமிழக வருவாய்துறை மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் முறைப்படி கேரள அரசு அதிகாரிகளிடம் சுவாமி விக்கிரகங்களை ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில், தமிழக தேவசம் போர்டு கமிஷனர் ஞானசேகர், விளவங்கோடு தாசில்தார் விஜயலெட்சுமி மற்றும் கேரள திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு, கோவளம் எம்.எல்.ஏ., வின்சென்ட், நெய்யாற்றின்கரை எம்.எல்.ஏ., ஆன்சலன், நெய்யாற்றின்கரை தாசில்தார் அனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தக்கலை டி. எஸ்.பி., கணேசன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். தொடர்ந்து கேரள போலீசார் சுவாமி விக்கிரகங்களுக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர். திருவனந்தபுரம் புறப்பட்ட சுவாமி விக்கிரகங்கள் நேற்று இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலில் தங்கியது. இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றடைகிறது. தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் விக்கிரகம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகன் விக்கிரகம் ஆரியசாலை அம்மன் கோயிலிலும், முன்னுதித்த நங்கை அம்மன் விக்கிரகம் செந்திட்டை அம்மன் கோயிலிலும் பூஜையில் வைக்கப்படுகிறது. 10 நாள் நவராத்திரி
பூஜையை தொடர்ந்து ஒருநாள் நல்லிருப்புக்கு பின் சுவாமி விக்கிரகங்கள் குமரிமாவட்டத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது.